கனடாவில் காய்ச்சல் பரவல் தீவிரமாகியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை
கனடாவில் இந்த ஆண்டுக்கான காய்ச்சல் பருவம் வழமையை விடவும் முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் காய்ச்சல் வைரஸ், அதிகளவில் பரவும் தன்மையும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாக தொற்றுநோய் மருத்துவரான கிறிஸ்டோபர் லேபோஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, காய்ச்சல் பரவல் காலத்தின் பிற்பகுதியிலேயே உச்சத்தை அடையும். ஆனால், இந்த ஆண்டில் அது முன்னதாகவே தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, H3N2 வகை வைரஸ் அதிக தொற்றுத்தன்மை கொண்டது என சுட்டிக்காட்டிய அவர், “நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள்” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒட்டாவாவில் அமைந்துள்ள கிழக்கு ஒன்ராறியோ சிறுவர் மருத்துவமனையில் , கடந்த வாரம் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நாளொன்றுக்கு 200-க்கும் அதிகமான நோயாளிகள் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக, சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும், மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும், அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளன” என அந்த மருத்துவமனையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

