ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், போலி ஏஜெண்டுகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி 60 நாட்களுக்கு முன்பாக செய்யப்படும் முன்பதிவுகளுக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தட்கல் டிக்கெட்டுகளுக்கு இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், தற்போது இது பொதுவான முன்பதிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 12 முதல் இந்த நடைமுறை முழுமையாக செயல்பாட்டுக்கு வருகிறது. இதன்படி, முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் கண்டிப்பாக ஆதார் சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். டிசம்பர் 29 முதல் ஒரு இடைக்கால ஏற்பாடாக, காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த நேர கட்டுப்பாடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, ஜனவரி 12 முதல் நாள் முழுவதும் ஆதார் உள்ளவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ரயில் நிலைய கவுன்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இந்த புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏஜெண்டுகள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் தங்களது ஐஆர்சிடிசி கணக்கை இப்போதே ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்வது கடைசி நேரத் தவிப்பை தவிர்க்க உதவும்.

