ஸ்ரீநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவி மெஹபூபா முஃப்தி, பத்திரிகையாளர் ஒருவரின் கோரிக்கையால் கடும் கோபமடைந்தார். அவர் தனது தாய்மொழியான காஷ்மீரியில் உரையாற்ற தொடங்கிய போது, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் அவரை உருது மொழியில் பேசுமாறு வற்புறுத்தினார்.
இதனால் ஆவேசமடைந்த முஃப்தி, “உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமென்றால் நீங்களே செய்துகொள்ளுங்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை என்றாவது உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா? தாய்மொழிக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். காஷ்மீரி மொழிக்கும் உரிய மரியாதையை கொடுங்கள்” என்று அதிரடியாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்தில் நிலவும் வன்முறை மற்றும் அங்கு இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். அங்குள்ள காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தாய்மொழி உரிமையை காக்க முதல்வர் ஸ்டாலினை முன்னுதாரணமாகக் காட்டி மெஹபூபா முஃப்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

