மும்பையை சேர்ந்த 68 வயது ஓய்வுபெற்ற பெண்மணி ஒருவரிடம், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து ரூ.3.71 கோடி பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில், அந்த பெண்ணின் ஆதார் கார்டு மூலம் ரூ.6 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை நடந்துள்ளதாக மிரட்டியுள்ளனர்.
வீடியோ காலில் தோன்றிய மர்ம நபர் ஒருவர், தன்னை “நீதிபதி சந்திரசூட்” என்று அடையாளப்படுத்தி கொண்டு, அந்த பெண்ணிற்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக நாடகமாடியுள்ளார். இதனால் பீதியடைந்த பெண், தனது குடும்பத்தை காப்பாற்றவும், வழக்கிலிருந்து தப்பிக்கவும் மியூச்சுவல் ஃபண்டுகளை விற்று ரூ.3.71 கோடியை மோசடி கும்பல் வழங்கிய கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
மீண்டும் அவர்கள் பணம் கேட்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். பொதுமக்களே, இதுபோன்ற வீடியோ கால் மிரட்டல்கள் மற்றும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

