அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே புளோரிடாவில் நடைபெற்ற சந்திப்பு, சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பின் போது பேசிய டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட சுமார் 8 போர்களை தான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் இடையிலான 35 ஆண்டு கால போரை நிறுத்த தவறினால், 200 சதவீத வரி விதிக்கப்படும் என தான் எச்சரித்ததாகவும், அதன் விளைவாக அடுத்த நாளே போர் நிறுத்தப்பட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதேபோல், தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த பெரும் மோதலை தனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக அவர் உரிமை கோரினார். இந்த பணிகளுக்காக தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், பாகிஸ்தான் உடனான விவகாரங்களில் எந்தவொரு மூன்றாவது நாட்டின் தலையீட்டையும் இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
டிரம்பின் இந்த அதிரடி கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

