ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகளே அமைதிக்கான ஒரே வழி என்றும், இந்த முயற்சிகளை குலைக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், புதினின் இல்லத்தை குறிவைத்து வீசப்பட்ட 91 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக கூறினார். இச்சம்பவம் காரணமாக அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிலைப்பாடு மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ரஷ்யா சொல்லும் ஒரு “திட்டமிடப்பட்ட பொய்” என்று அவர் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இச்சம்பவத்தால் தான் மிகுந்த கோபமடைந்ததாக தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதல்கள் அமைதி ஒப்பந்த முயற்சிகளைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தாலும், ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மிக அருகில் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

