ஒன்ராறியோவில் ஜனவரி 1 முதல் புதிய கார்பன் மோனாக்சைடு பாதுகாப்பு விதிகள் அமுலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்களின்படி, பல வீட்டு உரிமையாளர்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க மேலதிக CO எச்சரிக்கைக் கருவிகளைப் பொருத்த வேண்டியிருக்கும்.
புதிய விதிமுறைகளின் கீழ், உலைகள், நீர் சூடாக்கிகள், அடுப்புகள் அல்லது நெருப்பிடங்கள் போன்ற எரிபொருளில் இயங்கும் உபகரணங்களைக் கொண்ட எந்தவொரு வீட்டிலும், ஒவ்வொரு தளத்திலும் மற்றும் அனைத்து உறங்கும் பகுதிகளுக்கு வெளியேயும் கார்பன் மோனாக்சைடு எச்சரிக்கைக் கருவிகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே ஒரு CO கருவி உள்ள வீடுகள்கூட இந்த புதிய தரத்தைப் பூர்த்தி செய்ய மேலதிக கருவிகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம்.
மாகாணத்தில் அதிகரித்து வரும் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக பிரதி தீயணைப்பு அதிகாரி ஜோன் மெக்பெத் கூறுகிறார். “இந்த வாயுவிற்கு மணமோ, சுவையோ, நிறமோ கிடையாது. எனவே ஒன்ராறியோ மக்களைப் பாதுகாக்கவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்புத் துறை அலுவலகத்தின் அறிக்கையின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான கார்பன் மோனாக்சைடு சம்பவங்களும், அது தொடர்பான இறப்புகளும் வீட்டிற்குள்ளேயே நிகழ்கின்றன. குளிர்காலத்தில் இந்த ஆபத்து அதிகரிப்பதாகவும் பாரி தீயணைப்புத் துறை எச்சரிக்கிறது. பனிப்பொழிவு காரணமாக முறையான காற்றோட்டம் தடைபடுவதும், நெருப்பிடங்களின் பயன்பாடு அதிகரிப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கார்பன் மோனாக்சைடை எச்சரிக்கைக் கருவி இல்லாமல் கண்டறிய முடியாது என்பதால், அபாயகரமான அளவுகள் இருக்கும்போது அதைத் தெரிந்துகொள்ள CO கருவிகளே ஒரே நம்பகமான வழியாகும்.

