புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க, உணவு விநியோக செயலிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் திளைத்திருந்த அந்த இரவில், டெலிவரி பார்ட்னர்கள் கடும் வேலையழுத்தத்திற்கு மத்தியிலும் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தனர்.
புத்தாண்டில் ஒரு பயனர் இரவு 8:30 மணியளவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 10 மணிக்கு உணவை கொண்டு வந்த பிட்டு என்ற டெலிவரி பார்ட்னர், தாமதத்திற்காக வருந்தியதோடு இன்னும் பல ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதாக பதற்றத்துடன் கூறியுள்ளார். எனினும், அந்த அழுத்தத்திலும் அவர் காட்டிய புன்னகையும் கண்ணியமும் வாடிக்கையாளரை நெகிழ செய்தது. அந்த இளைஞரை சற்று ஓய்வெடுக்க சொல்லி தண்ணீர் அளித்த வாடிக்கையாளர், பின்னர் அவருக்கு ரூ. 501-ஐ டிப்ஸ் ஆக கொடுத்து அனுப்பினார்.
இதற்கு அந்த டெலிவரி பார்ட்னர் அளித்த பதில் இணையவாசிகளை உருக வைத்துள்ளது. “பெட்ரோல் செலவிற்கான பணம் கிடைத்துவிட்டது” என்று அவர் மிகவும் எதார்த்தமாக பதிலளித்துள்ளார்.
பண்டிகை நாட்களில் தங்களின் சொந்த பணத்தில் பெட்ரோல் போட்டு உழைக்கும் இவர்களின் வாழ்வாதார சிக்கலை இந்த பதில் உணர்த்துகிறது. “புத்தாண்டை ஒரு சிறந்த மனிதாபிமான செயலுடன் தொடங்கியுள்ளீர்கள்” என பலரும் இந்தப் பதிவை பாராட்டி வருகின்றனர்.

