2026 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் பங்கேற்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை 9.20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை காரணங்காட்டி, அந்நாட்டு வீரர்களை விளையாட அனுமதிக்க கூடாது என சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ வட்டாரங்கள், வங்கதேச வீரர்களை தடுக்க மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளன.
முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வெளியுறவுத் துறை எடுக்கும் இறுதி முடிவை பொறுத்தே, இந்த ஐபிஎல் தொடரில் முஸ்தபிசுர் ரஹ்மானின் பங்கேற்பு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

