மேற்குவங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க கோரி, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கடிதத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமாக லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களின் அடிப்படை வாக்குரிமையை இழக்க நேரிடும் என்று மம்தா பானர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பணியில் பல்வேறு நிர்வாக குறைபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மிகவும் தரமற்றதாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய தொழில்நுட்ப கோளாறுகள் ஒட்டுமொத்த தேர்தல் முறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாக அவர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வரின் இந்த கடிதம், தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

