தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் நிலவும் செய்திகள் திமுக கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனப் பலமாக பேசப்படுகிறது. மாணிக் தாகூர் சமீபகாலமாக ‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தை தீவிரமாக முன்வைத்து வருவது திமுக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாணிக் தாகூர் தலைவரானால், திமுக – காங்கிரஸ் உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளை சரிசெய்யவே மேலிடம் இந்த மாற்றத்தை திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், செல்வப்பெருந்தகையை பதவியிலிருந்து நீக்கினால் அது சமூக ரீதியிலான விவாதங்களை உருவாக்கும் என்பதால் காங்கிரஸ் மேலிடம் மிகவும் கவனமாக ஆலோசித்து வருகிறது. இந்த தலைமை மாற்றம் உறுதியானால், வரும் பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

