ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாததால் பட ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் வியூக கோப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ‘தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தீய நோக்கத்துடன் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது.
சென்சார் சான்றிதழ் வழங்காமல் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸை மத்திய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. ஜனநாயகன் படத்தை தடுப்பது தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமம்\ என அவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ள கருத்தில் ‘சிபிஐ, வருமானத்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மத்திய அரசின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது. ஜனநாயகம் திரைப்படத்திற்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது’ என தெரிவித்திருக்கிறார். அதோடு தணிக்கை வாரியம் காலவாதியாக விட்டது.. அது கலைக்கப்பட வேண்டும்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள கருத்தில் ‘அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐக்கு பிறகு தற்போது தணிக்கை வாரியத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று அச்சுறுத்தலுக்கான கருவியாக மாறியுள்ளன’ என கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிகமான தொகுதிகள் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறது காங்கிரஸ். ஒருவேளை திமுக இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் காங்கிரஸ் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என சொல்லப்பட்டு வரும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

