பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல நாட்களாகவே பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று 19வது நாளாக போராட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக வெளியூரில் இருந்து பல குழுக்களாக வந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் பேருந்தில் ஏற மறுத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதன்பின் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சில திருமண மண்டபங்களில் போலீசார் தங்க வைத்து மாலை விடுவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், ஆசிரியர்கள் இயக்கங்கள் தங்கள் கோரிக்கைகளை சொன்னார்கள். இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பகுதி நேர ஆசிரியர்களின் சம்பள,ம் 15 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு பல நெருக்கடிகளை முன்வைத்து 3,548 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் நிறுத்தி வைக்கிறது. ஆனாலும், பகுதிநேர ஆசியர்களின் கோரிக்கையை ஏற்று அவரின் சம்பளம் 12,500 லிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

