விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டில் நிலவி வரும் சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன. இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னதாக, தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், தணிக்கை வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்ததால், அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தயாரிப்பு தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; உயர் நீதிமன்றமே முழுமையாக விசாரணை நடத்தி முடிவெடுக்கட்டும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டி வரும் படக்குழுவினர், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

