மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டையில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் டீசல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சுங்கத்துறையினர் சுமார் 72 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த சோதனையை நடத்தினர். இது தொடர்பாக சத்தீஸ்கரைச் சேர்ந்த 4 மாலுமிகள் மற்றும் மகாராஷ்டிராவின் உரான் பகுதியை சேர்ந்த ஒரு கேப்டன் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 19.786 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஹாங்காங் மற்றும் பாங்காக்கிலிருந்து வந்த மூன்று பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர்கள் தங்களின் டிராலி பைகளில் சுமார் 19.786 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டீசல் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய இரண்டு வெவ்வேறு சம்பவங்களிலும் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பை சுங்கத்துறையினரின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் கடத்தல் கும்பல் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

