ஈரானில் நிலவி வரும் கடுமையான உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அங்கு சிக்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் இரண்டு வணிக விமானங்கள் நேற்று நள்ளிரவு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இது முறையான மீட்பு நடவடிக்கை இல்லை என்றாலும், ஈரானில் அதிகரித்து வரும் வன்முறையை கருத்தில் கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் பல இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து திரும்பிய பயணிகள், அங்குள்ள சூழல் மிகவும் பயங்கரமாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த சில வாரங்களாக இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டதால், தங்களால் இந்தியாவிலுள்ள குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், தூதரகத்தை தொடர்பு கொள்வதில் கூட சிரமம் இருந்ததாகவும் அவர்கள் கவலையுடன் பகிர்ந்துகொண்டனர். சாலைகளில் போராட்டக்காரர்கள் வாகனங்களை வழிமறிப்பதும், ஆங்காங்கே தீ வைப்புச் சம்பவங்கள் நடப்பதும் அன்றாட வாழ்க்கையை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக திரும்பிய பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
அலி கமேனி தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய இந்த போராட்டங்கள், தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன. இதில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் போக்கு உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ள நிலையில், ஈரானில் உள்ள சுமார் 9,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

