தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், உரையை தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து அவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல் சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் செயல் என ஆளுங்கட்சி தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை விதி 17-ன் கீழ் ஒரு முக்கிய தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் சென்றதை ஏற்க முடியாது என்றும், கணினியில் பதிவேற்றப்பட்ட உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழாக்கம் அவையில் முறைப்படி படிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஆளுநர் உரையாற்றும் முறையையே முற்றிலுமாக நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த போவதாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.

