நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சுமாரான செயல்பாடு, அவரது எதிர்காலம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது நண்பர் ஜடேஜாவுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ஜடேஜா எப்போதும் தனது பலத்திற்குள்ளேயே நின்று பந்துவீசும் ஒரு பழமைவாத வீரர் என்றும், ஆனால் தற்போதைய சூழலில் அவர் விராட் கோலியை போல தன்னைத்தானே மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
வலைப்பயிற்சியில் கேரம் பால் போன்ற புதிய யுக்திகளை ஜடேஜா முயற்சித்தாலும், போட்டிகளின் போது அவர் ரிஸ்க் எடுக்க தயங்குவதாக அஸ்வின் கூறியுள்ளார். “தோல்வி அடைவோம் என்ற பயத்தில் பழைய பாணியிலேயே பந்துவீசி அணியிலிருந்து நீக்கப்படுவதை விட, புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்த்து அதன்பின் நீக்கப்பட்டால் அதில் ஒரு திருப்தி இருக்கும்.
ஆனால், அந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் ஜடேஜாவின் கேரியர் இன்னும் உயரும்” என்று அஸ்வின் ஊக்கப்படுத்தியுள்ளார்.

