2026-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலி தொகுதிக்கு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், அவரது தாத்தா பெரோஸ் காந்தியின் தொலைந்து போன ஓட்டுநர் உரிமம் ஒப்படைக்கப்பட்டது.
ராய்பரேலி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது, போட்டி ஒருங்கினைப்பு குழுவைச் சேர்ந்த விகாஸ் சிங் என்பவர் இந்த வரலாற்று ஆவணத்தை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ராய்பரேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது விகாஸ் சிங்கின் மாமனார் இந்த உரிமத்தை கண்டெடுத்துள்ளார். அவர் காலமான பிறகு, அவரது மாமியார் இதனை ஒரு மதிப்புமிக்க சொத்து போல மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்.
ராகுல் காந்தி தனது தொகுதிக்கு வருகை தருவதை அறிந்த அந்த பண்பான குடும்பத்தினர், அதனை உரியவர்களிடம் சேர்ப்பது தங்கள் கடமை எனக் கருதி ராகுலிடம் ஒப்படைத்தனர். மேடையில் அதனை பெற்றுக் கொண்ட ராகுல் காந்தி, மிகவும் கவனமாக பார்த்ததுடன் உடனடியாக அதன் புகைப்படத்தை தனது தாயார் சோனியா காந்திக்கு வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து நெகிழ்ந்தார்.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் ராய்பரேலி தொகுதியில் வெற்றி பெற்ற பெரோஸ் காந்தி, செப்டம்பர் 7, 1960 அன்று காலமானார். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது ஒரு தனிப்பட்ட அடையாளம் மீண்டும் அவரது பேரனிடமே வந்து சேர்ந்தது, ராய்பரேலி மக்களுக்கும் காந்தி குடும்பத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

