கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் மிசிசாகா பகுதியைச் சேர்ந்த லெஸ்லி பென்ட்லி என்ற முதியவர், சுமார் 34,000 டாலர் மதிப்பிலான பண மோசடியில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி தற்பொழுது பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
லெஸ்லியின் வீட்டுக்கு வந்த ஒரு நபர், அவரது வீட்டின் கூரை சேதமடைந்துள்ளதாகக் கூறி அதனைச் சரி செய்ய முன்வந்துள்ளார். இதனை நம்பிய லெஸ்லி, முதற்கட்டமாக 7,000 டாலர்களை ரொக்கமாக வழங்கியுள்ளார். கூரையின் மேல் ஏறிய அந்த நபர், உட்புற மரச்சட்டங்கள் அழுகிவிட்டதாகவும், முழுமையாக மாற்ற வேண்டும் என்றும் கூறி மேலும் 27,000 டாலர்களைக் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த லெஸ்லி தனது மகளைத் தொடர்பு கொண்டார். லெஸ்லியின் மகனும் மகளும் நேரில் வந்து சோதித்தபோது, கூரையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. அவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியதும் அந்த மோசடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்தச் சம்பவம் குறித்து பீல் பிராந்திய காவல்துறைக்கு லெஸ்லி புகார் அளித்துள்ளார். இது போன்ற அறிமுகமில்லாத நபர்களிடம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகப் பணத்தை வழங்க வேண்டாம் என அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

