2026-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி பங்கேற்காது என்பதை அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசிப் நஸ்ருல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையிலும், அந்நாடு தனது முடிவில் உறுதியாக உள்ளது. ஐசிசி நடத்திய வாக்கெடுப்பில் 16 உறுப்பு நாடுகளில் 14 நாடுகள் வங்கதேசத்தின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தன. பாகிஸ்தான் மட்டுமே வங்கதேசத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தூண்டுதல் இருப்பதாக கருதப்படுகிறது. வங்கதேசத்தின் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த தயார் என்று பாகிஸ்தான் மின்னஞ்சல் அனுப்பியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப், வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் உலகக் கோப்பையைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் மதன் லால் கூறுகையில், “வங்கதேசத்தின் இந்த முடிவு முட்டாள்தனமானது; இதனால் இந்தியாவுக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் வங்கதேச கிரிக்கெட் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும்” என்று விமர்சித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரைப் புறக்கணிப்பது வங்கதேச கிரிக்கெட்டின் வணிக ரீதியான வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஒருவேளை வங்கதேசம் விலகினால், அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

