அமெரிக்காவின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை, அதாவது சுமார் 14 கோடி மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு ‘ராட்சத பனிப்புயல்’ அந்நாட்டை உலுக்கி வருகிறது. நியூ மெக்ஸிகோ முதல் நியூ இங்கிலாந்து வரையிலான 2,000 மைல் பரப்பளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கடும் குளிர்கால புயலால், இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் ஆபத்தான முறையில் பனி உறைந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
டெக்சாஸ், லூசியானா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பனிப்பொழிவு மற்றும் ஆலங்கட்டி மழையினால் மின்கம்பங்கள் சரிந்து, சுமார் 1,20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள் மற்றும் சாலைகளின் மேல் விழுந்துள்ளன.
ஜார்ஜியா போன்ற தெற்கு மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பனிப்புயல் இது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிட்வெஸ்ட் பகுதிகளில் மைனஸ் 40 டிகிரி வரை குளிர் நிலவுவதால், 10 நிமிடங்களிலேயே ‘ஃப்ரோஸ்ட்பைட்’ எனப்படும் பனிப்புண் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

