இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். உலக அளவில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரான இவரது பக்கத்தை சுமார் 275 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை திடீரென டிஆக்டிவேட் செய்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலியின் கணக்கு திடீரென மறைந்ததை தொடர்ந்து, இணையதளங்களில் இது குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பல ரசிகர்கள் அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியை டேக் செய்து, “ஏன் விராட் தனது கணக்கை நீக்கினார்? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், அனுஷ்கா சர்மா இதுவரை ரசிகர்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது விராட் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க நினைக்கிறாரா என்பது மர்மமாகவே உள்ளது.

