மத்திய அரசின் 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, வார விடுமுறை நாளான ஞாயிறன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு சனிக்கிழமைகளில் சில முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு புதிய வரலாற்று நிகழ்வாகும்.
முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறை இருந்தது. ஆனால், 2017-ல் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, புதிய நிதியாண்டு ஏப்ரலில் தொடங்குவதற்கு முன் திட்டமிட வசதியாக பிப்ரவரி 1-ஆம் தேதியை பட்ஜெட் தினமாக மாற்றினார்.
அந்த வரிசையில் இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், வழக்கமான தேதியில் மாற்றமின்றி பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. வாஜ்பாய் காலத்தில் மாலை 5 மணிக்குப் பதில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அறிமுகமானது. அந்தப் பாரம்பரியமே இப்போதும் பின்பற்றப்படுகிறது.

