பாகிஸ்தானின் பலூசிஸ்தான், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலக்கு வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கடந்த 24 மணிநேரத்தில் நடத்திய அதிரடி தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலூசிஸ்தானில் மட்டும் 41 பேர் வீழ்த்தப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டிய சதித்திட்டத்தை முறியடிக்க, 25-க்கும் மேற்பட்ட நவீன ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த ‘ஆபரேஷன்’ முன்னெடுக்கப்பட்டது.
இருதரப்பு மோதலில் துரதிர்ஷ்டவசமாக மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான நவீன ரக ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ரொக்கப் பணத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத்தின் இந்த ஒட்டுமொத்த வேட்டை மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

