உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.
எந்தவொரு வலுவான காரணமும் இன்றி இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு, நடப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை காட்டவே பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறாமல் போனால், ஐசிசி-க்கு சுமார் 4500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தரவுகள் தெரிவிக்கின்றன.
அடிப்படை முகாந்திரம் ஏதுமின்றி விளையாட்டை புறக்கணிப்பதை ஏற்க முடியாது என ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இந்த பிடிவாதம் அந்த அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்தே வெளியேற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது, இது சர்வதேச கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

