சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களை கனடிய சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்ய அனுமதிப்பதற்கு, பெரும்பாலான கனடியர்கள் ஆதரவு தெரிவிப்பதாக லெஜர் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் சீன மின்சார வாகனங்களுக்கான நூறு சதவீத சுங்க வரியை ஆறு புள்ளி ஒன்று சதவீதமாக குறைக்க கனடா அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வர்த்தக விதிகளின்படி, ஆண்டுக்கு அதிகபட்சமாக நாற்பத்தொன்பதாயிரம் வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார முன்னெடுப்பிற்கு ஈடாக, கனடாவின் விவசாயப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பதிலடி சுங்க வரிகளை சீனா குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டாவா மற்றும் பீஜிங் இடையிலான இந்த முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பத்தில் ஏழு கனடியர்கள் அறிந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆண்கள் மற்றும் ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக காணப்படுகிறது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் அறுபத்து ஒரு சதவீதம் பேர் சீன மின்சார வாகனங்களின் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில் இருபத்து நான்கு சதவீதம் பேர் தங்களின் வலுவான ஆதரவை பதிவு செய்துள்ளனர். மாகாண வாரியான தரவுகளின்படி, கியூபெக் மாகாணத்தில் எழுபத்து இரண்டு சதவீத மக்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர். கடந்த பன்னிரண்டு மாதங்களில் சீனாவுடனான உறவில் கனடியர்களின் அணுகுமுறை முற்றிலும் மாறியுள்ளதாக லெஜர் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஸ்டீவ் மோசோப் தெரிவித்துள்ளார்.

