அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேர்தல் முறையில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவரும் வகையில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இனிவரும் தேர்தல்களில் ராணுவத்தினர் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர, மற்ற குடிமக்கள் எவருக்கும் ‘தபால் ஓட்டு’ மற்றும் ‘இமெயில் ஓட்டு’ வசதிகள் கிடையாது என்று அவர் அறிவித்துள்ளார்.
தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும், வாக்குப்பதிவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களின் போது தபால் ஓட்டுகளில் முறைகேடுகள் நடந்ததாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். சாதாரண குடிமக்கள் அனைவரும் தேர்தல் நாளன்று நேரடியாக வாக்குச்சாவடிகளுக்குச் சென்றே வாக்களிக்க வேண்டும் என்பது இதன் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாக்களிப்பவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், இந்த முடிவு முதியவர்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களின் வாக்குரிமையை பாதிக்கும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், தனது முடிவில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இது தேர்தல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

