தவெக தலைவர் விஜய் இன்று சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது. இந்த கூட்டம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என தவெக நிர்வாகிகள் கூறினார்கள். காவல்துறையும் அந்த நேரத்திற்குதான் அனுமதி கொடுத்திருந்தது.
இன்று சற்று வெயில் அதிகமாகவே இருந்ததால் விஜய் பேசிக்கொண்டிருந்த போது வெயிலில் சிலர் மயக்கமடைந்தனர். வட மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்பவர் வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
ஏற்கனவே கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சேலத்தில் மீண்டும் விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பலரும் வெயிலில் நின்று கொண்டே இருந்தார்கள்.. அவர்களுக்கு மேலே கூரைகள் அமைக்கப்படவில்லை. இந்த ஏற்பாடுகளை தவெகவினர் செய்திருக்க வேண்டும்.
41 பேர் உயிரிழந்த பின்பும் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று அதிமுகவினரும், திமுகவினரும் விமர்சித்து வருகிறார்கள். ஒருபக்கம் இந்த சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தவெக தலைவர் விஜய் இதுவரை தனது சமூக வலைதள பக்கங்களில் சுராஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. எனவே இதையும் சேர்த்து பலரும் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள்.

