துருக்கியின் கெய்சேரி நகரில் நடைபெற்ற ஒரு வினோதமான நகைக்கடை கொள்ளை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, முகமூடி அணிந்த 26 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த ஒரு ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தை பயன்படுத்தி நகைக்கடையின் இரும்பு ஷட்டர்களை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கிருந்த சுமார் 150 கிராம் தங்க நகைகளை திருடிக்கொண்டு, பின்னர் ஒரு கழுதையின் மீது ஏறி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த வினோத கொள்ளையை சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியை கைது செய்தனர். அவரிடமிருந்து மோதிரங்கள், கழுத்தணிகள் உள்ளிட்ட நகைகள் மீட்கப்பட்டு கடை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையில், மது அருந்திவிட்டு மதுக்கடையை தேடி அலைந்தபோது, ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தை கண்டதாகவும், தனது பணக்கஷ்டம் காரணமாக நகைக்கடையை உடைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளை ஒரு கொட்டகையில் மறைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஃபோர்க்லிஃப்ட் மற்றும் கழுதையைப் பயன்படுத்தி நடந்த இந்த நூதன திருட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

