கோலிவுட்டில் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் ஒரு படத்தை முடித்தவுடன் அடுத்த படம் என நடிக்கும் நடிகராக தனுஷ் இருக்கிறார். ஒருபக்கம் திரைப்படங்களையும் இயக்குகிறார்.. தயாரிக்கிறார்.. தனுஷின் இந்த செயலை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியப்படுகிறது. ‘இவரால் எப்படி இப்படி முடிகிறது?’ என சக நடிகர்களே வியந்து பார்க்கிறார்கள்.. தனுஷ் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.
போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடித்து முடித்த தனுஷ் தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்கிறார்கள். இந்த படத்தை முடித்துவிட்டு தனுஷ் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என செய்திகள் வெளியானது.
ஆனால் அது உண்மை இல்லை என்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமிக்கு பின் தனுஷின் படத்தை இயக்கப் போவது லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சைமுத்து என்கிறார்கள். அந்த படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். அதன் பின்னரே ஹெச்.வினோத்தும், தனுஷும் இணைவார்கள் எனத்தெரிகிறது.

