காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் “உரிய மரியாதை அளிக்காவிட்டால் திருப்பி அடிப்போம்” எனக் கூறியிருந்தது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியது. இது குறித்து செய்தியாளர் ஒருவர், “திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு பவர் இருக்கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு, எம்பி சசிகாந்த் செந்தில் மிகுந்த ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார். இத்தகைய கேள்வியை எழுப்புவதே தவறு என்று குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே உள்ளது என்றார்.
மக்கள் ஒரு கட்சியின் மீது வைத்துள்ள பாசம் மற்றும் நம்பிக்கையை பொறுத்தே அந்த கட்சியின் பலம் அமையும் என்று அவர் விளக்கினார். காங்கிரஸ் என்பது இந்தியா முழுவதும் வேரூன்றியுள்ள ஒரு தேசிய கட்சி என்றும், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள ஒரு பாரம்பரியமான கட்சியை பார்த்துப் பலம் இருக்கிறதா என்று கேட்பது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த மோதல்கள் நிலவி வரும் சூழலில், சசிகாந்த் செந்திலின் இந்த பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் இருப்பையும் வலிமையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பதே அவரது கருத்தின் சாரமாக அமைந்தது.

