மத்தியில் ஆளும் பாஜக அரசு தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) என்கிற பெயரில்தான் தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த கூட்டணிக்கு பாஜகவே தலைமை வகித்து வருகிறது.
ஒருபக்கம் பாஜகவுக்கு எதிராக நிற்கும் காங்கிரஸ் ‘இந்தியா’ INDIA என்கிற கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அந்த கூட்டணியில் மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அல்லது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தலைவர் ஆக்கலாம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கோரிக்கை வைத்திருக்கிறது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ‘பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கூட்டணி தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை கைவிட்டு விட்டு மு.க ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி போன்ற வலிமையான தலைவரை இந்த கூட்டணிக்கு தலைவர் ஆக்க வேண்டும்.. அதை இப்போதே அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், ராகுல் காந்தி எவ்வளவு தீவிரமாக போராடினாலும் கட்சியில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையே உள்ள முரண்பட்ட கருத்துக்களால் கூட்டணி பலவீனமாக இருப்பதாகவும், குறிப்பாக கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகளே தங்களுக்குள் மோதிக் கொள்வது பாஜகவிற்கு சாதகமாக முடியும்.
எனவே, ஒரு தெளிவான தலைமையின் கீழ் எல்லோரும் அணிசேர்வது காலத்தின் கட்டாயம் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் மட்டுமே முடியும் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

