உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ரஷ்யாவில் வெள்ளரிக்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
டிசம்பர் மாதத்திலிருந்து இதன் விலை இருமடங்காக அதிகரித்து, ஒரு கிலோ 300 ரூபிள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.356 முதல் விற்கப்படுகிறது. சில இடங்களில் இறைச்சி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை விட வெள்ளரிக்காய் விலை அதிகமாக இருப்பதால், ரஷ்ய மக்கள் இதனை “ஆடம்பர உணவு” என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த விலையேற்றத்திற்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட பணவீக்கம், தொழிலாளர் தட்டுப்பாடு மற்றும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த வரி உயர்வுஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
சைபீரியா போன்ற பகுதிகளில் ஒரு நபர் இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமை மோசமானதால், சில செய்தித்தாள்கள் தங்கள் வாசகர்களுக்கு வெள்ளரிக்காய் விதைகளை இலவசமாக வழங்கி, வீடுகளிலேயே வளர்க்க அறிவுறுத்தி வருகின்றன.

