கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள தோர்ன்ஹில் பகுதியில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி கூடத்தில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் யோர்க் பிராந்திய காவல்துறை, தற்போது சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஸ்டீல்ஸ் அவென்யூ மற்றும் யாங் ஸ்ட்ரீட் சந்திப்பிற்கு அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் மீது திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய குற்றவாளி, கருப்பு நிற முகமூடி மற்றும் அடர் நிற ஆடைகளை அணிந்திருந்ததாக சாட்சிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்குப் பிறகு அவர் ஒரு கருப்பு நிற எஸ்.யு.வி ரக வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். அந்த வாகனம் ஜீப் கிராண்ட் செரோக்கி (Jeep Grand Cherokee) மாடலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாகனத்தின் புகைப்படத்தின் அடிப்படையில் பொதுமக்கள் ஏதேனும் தகவல்களை அறிந்திருந்தால் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அந்த நேரத்தில் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகளின் டேஷ்கேம் (Dashcam) பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஒப்படைக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்தது அல்ல, ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

