முன்பெல்லாம் கோலிவுட்டில் ஒரு நடிகரின் முந்தைய படம் ஓடவில்லை என்றாலும் எனக்கு இவ்வளவு ஓடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என நடிகர்கள் கறாராக சம்பளம் வாங்கி வந்தார்கள்.. தற்போது அதில் மாற்றம் வர துவங்கியிருக்கிறது. சில நடிகர்கள் சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் பங்கு என பேச துவங்கியிருக்கிறார்கள். முழுமையாக எல்லா நடிகர்களும் அதை செய்யவில்லை என்றாலும் சில நடிகர்கள் அதை செய்ய தொடங்கியிருப்பது தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏனெனில் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு நடிகர் நடித்து விட்டு போயிடுவார்.. ஆனால் படம் நஷ்டம் என்றால் முழு நஷ்டமும் தயாரிப்பாளரின் தலையில் மட்டுமே முடியும்.. இதுவே லாபத்தில் பங்கு என்று சொல்லிவிட்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை.
அந்தவகையில் சிவகார்த்திகேயனும் லாபத்தில் பங்கு என நடிக்க துவங்கி இருக்கிறார்.. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தாய் கிழவி படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு 10 கோடி மட்டுமே அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார்களாம்..
மேலும் படத்தில் என்ன லாபம் வருகிறதோ அதில் 70 சதவீத பங்கு சிவகார்த்திகேயனுக்கு என்று பேசியிருக்கிறார்கள். இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு 60 கோடி வரை சம்பளமாக கிடைக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

