தமிழ் சினிமாவின் இன்றைய நகைச்சுவை நாயகன் யோகி பாபு, தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார். ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்து சென்றவர், இன்று ரஜினி, விஜய், அஜித் எனப் பெரிய நடிகர்களுடன் இணைந்து கலக்கி வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகர் விஜயுடன் ‘சர்க்கார்’ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை யோகி பாபு பகிர்ந்துள்ளார்.
தளபதி விஜயின் நடனம் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘சர்க்கார்’ படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியை ‘சிங்கிள் டேக்’கில் ஆடி முடிக்க வேண்டும் என்ற சூழல். விஜய் அந்தச் சவாலை ஏற்று, மிக நேர்த்தியாகவும் வேகமாகவும் ஆடி முடித்தார். ஆடி முடித்த கையோடு, யோகி பாபுவின் அருகில் வந்த விஜய், அவர் தோளைத் தட்டி, “யோகி, என் கால் முட்டியைத் தொட்டுப் பாருடா” என்று கூறியுள்ளார். யோகி பாபுவும் ஆச்சரியத்துடன் தொட்டுப் பார்த்துள்ளார். அப்போது விஜயின் கால் முட்டிகள் கடுமையாக ஆடி கொண்டிருந்தன.
நடனத்திற்காக விஜய் எவ்வளவு உடல் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்த யோகி பாபு திகைத்து நின்றார். அப்போது விஜய் சிரித்துக்கொண்டே, “பார்த்தியா யோகி… இந்த மூணு வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு !” என்று விளையாட்டாக ஆனால் எதார்த்தமாகச் சொன்னாராம்.

