மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம், நேற்று உலகம் முழுவதும் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலியை அணுக முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
டவுன்டெக்டார் தரவுகளின்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 10,725 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 252 பயனர்களும், பிரிட்டனில் 135 பயனர்களும் இப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் செயலியை பயன்படுத்துவதில் 77 சதவீத பயனர்களும், இணையதளத்தை பயன்படுத்துவதில் 13 சதவீத பயனர்களும் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் தளம் கடந்த சில மாதங்களாக சீராக இயங்கி வந்த நிலையில், இந்த திடீர் முடக்கம் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கமோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

