அமெரிக்காவை சேர்ந்த Reflect Orbital என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், விண்வெளியில் 50,000 பெரிய கண்ணாடிகளை நிலைநிறுத்தி, இரவு நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சூரிய ஒளியை பிரதிபலிக்க திட்டமிட்டுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த இந்த நிறுவனம், முதற்கட்டமாக 60 அடி அகலமுள்ள கண்ணாடியை ஒரு சிறிய செயற்கைக்கோள் மூலம் ஏவ தயாராகி வருகிறது. இது தரையிலிருந்து பார்க்கும்போது ஒரு முழு நிலவின் பிரகாசத்துடன் தோன்றும்.
ஒரு மணிநேர வெளிச்சத்திற்கு சுமார் ரூ.4.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த திட்டம் சூரிய மின்சக்தி பண்ணைகளுக்கு இரவு நேரத்திலும் ஆற்றலை வழங்கவும், அவசர கால தேவைகளுக்கும் உதவும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பென் நோவாக் கூறுகிறார்.
இருப்பினும், இந்த முயற்சி வானியல் ஆய்வுகளை பாதிக்கும் என்றும், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தூக்க சுழற்சியை சிதைக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புவிசார் பொறியியல் சார்ந்த இத்திட்டம் காலநிலையை மாற்றியமைக்கும் அபாயம் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

