நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் நம்புகிறார்கள். இந்த கட்சிக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது.
அடிப்படையில் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவரின் ரசிகர்களின் வாக்குகள் முழுமையாக தவெகவுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதோடு அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றுக் கட்சியை விரும்புபவர்களும் விஜய்க்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது.. தவெக தனித்துப்போட்டியிட்டாலே 12 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.
அதேநேரம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே விஜய் அதிமுக – பாஜக கூட்டணியுடன் இணைகிறார் என்கிற செய்தி வெளியாகி வந்தது. ஆனால் தவெக இதை அதிகாரப்பூர்வமாக மறுத்தது. இந்நிலையில்தான், சென்னையில் நடந்த இர்தார் நோன்பு விழாவில் கலந்து கொண்ட விஜய் கூட்டணி குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்தே நம்மை அந்த டீம், இந்த டீம் என்று வதந்திகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் நம் எந்த டீமும் கிடையாது.. மக்களுடைய டீம் என்று தெரிந்த பின்னர் நம் மீது என்ன அவதூறு பரப்பலாம் என பார்த்தார்கள்.. அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லை.. அதனால் கடைசியாக இந்த கூட்டணியில் சேரப் போகிறார்.. அந்த கூட்டணி சேர போகிறார் என பொய்யான பிரச்சாரத்தை செய்தார்கள்.
இந்த செய்தியெல்லாம் கேட்டு நீங்கள் குழம்பியிருப்பீர்கள்.. நாம் எப்போதும் மதச்சார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.. நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என உறுதியாக இருக்கிறோம்.. எல்லாம்வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை அடைவோம்’ என விஜய் பேசியிருக்கிறார்.

