மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் சுமார் 800 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,700 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக பிபிசி ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதல்களை நடத்தியது. இதில் ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் அதிநவீன ராடார் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 485 மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ராடார் பலத்த சேதமடைந்துள்ளது. போரின் முதல் 12 நாட்களில் மட்டும் அமெரிக்காவிற்கு 16.5 பில்லியன் டாலர் செலவாகியுள்ள நிலையில், பென்டகன் தற்போது கூடுதலாக 200 பில்லியன் டாலர் போர் நிதியை கோரியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்க தளங்கள் மீதான இந்த தாக்குதல்கள் டிரம்பின் போர் திட்டங்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை 13 அமெரிக்க படை வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த மோதல் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

