டொராண்டோவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை முன்னிட்டு, மாநகர நிர்வாகம் விரிவான போக்குவரத்து மற்றும் நடமாட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஜூன் 12 முதல் ஜூலை 2 வரை டொராண்டோ ஸ்டேடியத்தில் ஆறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு சுமார் 3,00,000 பார்வையாளர்கள் நகருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிகள் நடைபெறும் நாட்களில் லேக் ஷோர் பொலிவார்ட் வெஸ்ட், ஸ்டிராச்சன் அவென்யூ மற்றும் டஃபெரின் வீதி உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் மூடப்படும். குறிப்பாக லேக் ஷோர் பொலிவார்ட் 10 மணிநேரம் வரை மூடப்பட வாய்ப்புள்ளது. இதனால் நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நெரிசலைக் குறைக்க ‘பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கோ டிரான்சிட் ரயில்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். டிடிசி பேருந்து மற்றும் வீதி மின்சார வண்டி சேவைகளும் அதிகரிக்கப்படும். எக்சிபிஷன் பிளேஸ் பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்காக பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மிதிவண்டி நிறுத்துமிடங்கள் தற்காலிகமாக அகற்றப்படும் என்றும், நடைபாதை பயணிகளுக்காக பிரத்யேக வழிகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகர அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

