அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 2வது முறை அமெரிக்க ஜனாதிபதியான பின் பல அதிரடியாக பேசியும், செயல்பட்டும் வருகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வரிகளை அதிக அளவில் உயர்த்தி உயர்த்தி விளையாடினர். அமெரிக்க உச்ச நீதிமன்றம் கண்டித்தபின் வரிகளை குறைத்தார். அடுத்தநாளே மீண்டும் வரிகளை உயர்த்தினார்.
அதன்பின் வெனிசுலா நாட்டில் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபரையும், அவரின் மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தார். வெனிசுலாவில் ஏராளமான எண்ணெய் வளம் இருப்பதால் அதை கைப்பற்ற டொனால்ட் டிம்ரப் நினைப்பதாக சொல்லப்பட்டது. அடுத்து கிரீன்லாந்தை நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்றார். ஏனெனில், அங்கும் அதிக அளவில் எண்ணெய் வளம் இருக்கிறது. உலக நாடுகள் எதிர்ப்பு தெரிக்கவும் அதை பற்றி பேசாமல் இருந்தார்.
அதன்பின், ஈரான் நாடு அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என சொல்லி இஸ்ரேலோடு சேர்ந்து அந்நாட்டை தாக்க துவங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி இந்த போர் துவங்கி ஒரு மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம், ஈரான் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ படைகள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இந்நிலையில்தான், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொளுத்தி போட்டிருக்கிறார்.
ஒருவேளை கார்க் தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்தால் அது ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதுடன் உலக எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒருபக்கம், டொனால்ட் டிரம்பின் இது போன்ற பேச்சுக்களாலும், அவரின் போர் நடவடிக்கைகளாலும் அதிருப்தி அடைந்த அமெரிக்க மக்கள் கடந்த சில நாட்களாகவே டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

