கடந்த 2020ம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொரானா காலத்தில் கடையை திறந்து வைத்ததாக சொல்லி அப்பகுதி போலீஸ் அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முழுவதும் மிகவும் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தனிப்பட்ட விரோதத்தால் நடந்ததாக சொல்லப்பட்டது.
போலீசார் தாக்கியதில் 2020 ஜூன் 22ம் தேதி பெனிக்ஸும், அடுத்தநாள் அவரின் தந்தை ஜெயரஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடமாநில ஊடகங்கள் கூட இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்ராஜ் என்பவர் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். 5 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கடந்த மாதம் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில்தான், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 9 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். காவல்துறைகள் செய்தது கொடுமையான குற்றம். நன்றாக படித்தவர்கள் என்பதால் தெரிந்தே இதை செய்திருக்கிறார்கள் எனவும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம், சென்னை உயர்நீதிமன்றத்திலோ, அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர்கள் ‘இந்த வழக்கை பொறுத்தவரை மேல்முறையீடு செய்தாலும் இதே தீர்ப்புதான். ஏனெனில், உயர் நீதிமன்றத்தில் ஆலோசனை படிதான் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் உச்சபட்ச தீர்ப்பை கொடுக்கும்படி ஏற்கனவே மத்திய அரசு சொல்லிவிட்டது. எனவே, இந்த வழக்கில் மேல்முறையீடு சென்றாலும் இதே தீர்ப்புதான் கிடைக்கும்’ என கூறியிருக்கிறார்கள்.

