பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகும் தான் நிம்மதியாக இருப்பதாக பகிர்ந்த பதிவு இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பொதுவாக வேலை இழந்தால் ஏற்படும் பதற்றம் தமக்கு இல்லையெனவும், அதற்கு முக்கிய காரணம் தான் ‘இஎம்ஐ’ முறையில் வீடு வாங்காததே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்க திட்டமிட்டிருந்த அவர், தொழில்நுட்ப துறையில் நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு அந்த முடிவை கைவிட்டுள்ளார். மாறாக, தனது வருமானத்தின் பெரும் பகுதியை சரியான இடங்களில் முதலீடு செய்துள்ளார்.
“கையில் வேறு வேலை இல்லை என்றாலும், மாதந்தோறும் கட்ட வேண்டிய வீட்டு தவணை இல்லாதது எனக்கு பெரும் நிம்மதியைத் தருகிறது,” என அவர் கூறியுள்ளார். இந்த பதிவு, இளைஞர்கள் மத்தியில் வாடகை வீடா அல்லது சொந்த வீடா? என்ற நிதி மேலாண்மை குறித்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இக்கட்டான காலங்களில் கடன் சுமை இல்லாமல் இருப்பது எத்தகைய மன அமைதியை தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

