அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உலகமே நிம்மதி பெருமூச்சு விட்ட சில மணி நேரங்களிலேயே, கிழக்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
கிம் ஜோங் உன் தலைமையிலான வடகொரியா, தனது கிழக்கு கடற்கரை பகுதியான Wonsan நகரிலிருந்து பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனையிட்டது. இந்த ஏவுகணைகள் சுமார் 240 கிலோமீட்டர் தூரம் பயணித்து கடலில் விழுந்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் வடகொரியா நடத்தும் இரண்டாவது சோதனை இதுவாகும்.
நேற்று பியாங்யாங் அருகே நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக கருதப்படும் நிலையில், இன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவை தனது “மிகப்பெரிய எதிரி” என்று அறிவித்துள்ள வடகொரியா, அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. அதேசமயம், அமெரிக்கா தனது நிபந்தனைகளை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்றும் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் இந்த ஏவுகணை சோதனைகள் பிராந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. தென்கொரிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் இந்த ஏவுகணைகளின் தரவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

