அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்தது முதலில் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தான் சொல்வதை கேட்காத நாடுகளுக்கு அதிக அளவு வரிகளை விதித்து வருகிறார். சீனாவுக்கு பல மடங்கு வரிகளை உயர்த்தி உயர்த்தி விளையாடினார். ஒரு பக்கம் சீனாவும் அமெரிக்காவுக்கான வரிகளை உயர்த்தியது.
மேலும், ரஷ்யாவிடம் என் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்தியாவுக்கும் அதிக அளவு வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டினார். அதற்கு இந்தியா எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். மேலும் கூடுதல் வரியாக மேலும் 25 சதவீத வரி விதித்தார்..
அதேநேரம் சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடிக்கும், டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப் ‘ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விடுவதாக இந்தியா கூறிவிட்டது. எனவே இந்திய மீதான வரியை 18 சதவீதமாக குறைக்கிறேன்’ என அறிவித்தார். மேலும், சில நாட்களில் கூடுதல் வரியையும் நீக்கினார்.
அதேநேரம் தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாக ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும் இந்தியா கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து மட்டும் வாங்கவில்லை.. பல நாடுகளில் இருந்தும் வாங்குகிறது.. அது அவர்களின் சுதந்திரம் என ரஷ்யா கூறியிருந்தது..
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் மட்டும்தான் சொல்லி வருகிறார். வேறு யாரும் அப்படி சொல்லவில்லை. ரஷ்யா – இந்திய ஒப்பந்தங்கள் ஆபத்தத்தில் உள்ளதாக நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை’ என கூறியிருக்கிறார்.

