செயற்கை நுண்ணறிவு Coding tools வருகையால் ஐடி ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் குறித்த விவாதம் இணையத்தில் பரவி வருகிறது. Reddit தளத்தில் இந்திய தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், “AI காரணமாக நான் எனது வேலையை ராஜினாமா செய்ய போகிறேன்” என்ற தலைப்பில் தனது குமுறலை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், தங்கள் நிறுவனம் டெவலப்பர்களுக்கு AI உரிமங்களை வழங்கிய பிறகு, நிர்வாகம் வேலைக்கான காலக்கெடுவை மிகவும் குறைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். AI தொழில்நுட்பம் மிக விரைவாக கோடிங் உருவாக்கினாலும், அதில் பல மறைமுக பிழைகள் இருப்பதாகவும், அவற்றை சரிபார்த்து திருத்துவதற்கு இருமடங்கு நேரம் எடுப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார். ஆனால், மேலாளர்கள் AI-ஐ ஒரு ‘மந்திரக்கோல்’ போல நினைத்து கொண்டு, உடனுக்குடன் துல்லியமான முடிவுகளை எதிர்பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே நிறுவனத்தின் நிதி நெருக்கடி, போதிய வளர்ச்சி இல்லாமை, மற்றும் அனைத்து வேலைகளையும் “அவசரம்” என கூறி விடுப்பு எடுக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவர் கூறியுள்ளார். இதனால் தனது மன அமைதியை பாதுகாக்க வேலை சந்தை கடினமாக இருந்தாலும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போதைய ஐடி நிறுவனங்களின் வேலை சூழல் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

