தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு ரூபாய் கூட லஞ்சம் அல்லது செலவு இல்லாமல் 132 சார்பதிவாளர்கள் அவர்கள் விருப்பப்பட்ட இடங்களிலேயே பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கை பதிவுத்துறை வரலாற்றில் ஒரு புதிய சரித்திர சாதனையாக கருதப்படுகிறது என்று பதிவுத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பொதுமக்களிடையே அரசுத்துறைகளில், குறிப்பாக பதிவுத்துறையில் பணி மாறுதல்களுக்கு பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், தற்போதைய இந்த நேர்மையான இடமாற்ற நடைமுறை அதிகாரிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீர்திருத்தத்தை தொடர்ந்து, இதேபோன்று சார்பதிவாளர்களும் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் எவ்வித லஞ்சமும் வாங்காமல், ஆவண பதிவுகளை உடனுக்குடனும் நேர்மையாகவும் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அரசு ஊழியர்களின் இடமாற்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வெளிப்படைத்தன்மை, அடிமட்ட அளவிலும் லஞ்சமற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது சொத்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

