உலகில் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக டெலிகிராம் (Telegram) ஆப் இருக்கிறது. வாட்ஸ் அப்பை போலவே இதிலும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை பகிர முடியும். பிடித்தவர்களுடன் உரையாட முடியும். ஒரு பக்கம் டெலிகிராம் ஆப்பை பலரும் முறைகேடாகவும் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது ஆபாச வீடியோக்கள், புதிய திரைப்படங்கள் மற்றும் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை டவுன்லோட் செய்து பலரும் டெலிகிராமில் பகிர்கிறார்கள். எனவே ஓடிடியில் ஒளிபரப்பாகும் படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை டெலிகிராமிலிருந்து டவுன்லோட் செய்து பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது..
இந்நிலையில்தான் இந்திய அரசு இதை தடுக்கும் வழியில் இறங்கியிருக்கிறது. திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
மேலும், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெல்கிராமுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் ஆப் மூலமாக கசிந்ததால் சமீபத்தில் நீட் தேர்வு நடந்த போது சில நாட்கள் இந்தியாவில் டெலிகிராம் ஆப் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

